அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் போது தற்பொழுது நடைமுறையில் உள்ள அளவுகோல்களை மறு ஆய்வு செய்வது தொடர்பான நடைமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் தற்போது பயன்படுத்தப்படும் அளவுகோல்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அதனை மறு ஆய்வு செய்யுமாறு குறித்த குழு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதற்கு இணங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள புதிய முறை குறித்த முன்னோடி ஆய்வு பற்றி நலன்புரி சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். தற்பொழுது நடைமுறையில் உள்ள தெரிவுக்கான அளவுகோல்களுக்குப் பதிலாக சமூக-பொருளாதார பாதிப்பு நிலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய முறையை குறித்த நிபுணர்கள் குழு முன்மொழிந்திருப்பதாகவும், இது தொடர்பான முன்னோடி ஆய்வொன்றை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு குடும்பத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு, குடும்ப அமைப்பு, வயது, இயலாமை, நீண்டகால நோய்கள், வீட்டுவசதி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல், மற்றும் கடன் சுமை உள்ளிட்ட சமூக-பொருளாதார இடர் காரணிகளைக் கருத்தில் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை குறித்து குழுவில் நிண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய முன்னோடி ஆய்வினை இனை மேற்கொள்வதற்கு குழு அனுமதி வழங்கியது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க மற்றும் எரங்க வீரரத்ன, அத்துடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி நந்தன மில்லகல, திலின சமரகோன், சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.





