2026 பெப்ரவரி 10 ஆம் திகதி கொழும்பிலுள்ள பழைய பாராளுமன்றக் கட்டடத்தில், முக்கியமான அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. Sri Lanka CERT மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு, நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்லாது, அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.
முக்கியமான தகவல் உட்கட்டமைப்புகளை இயக்கும் அனைத்து அரச நிறுவனங்களையும் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான கொள்கை மட்டத்திலான தீர்மானங்கள் ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள அரச நிறுவனங்களை இந்த மையத்துடன் இணைக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளன. குறிப்பாக, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அரச நிறுவனங்கள் தேசிய தணிக்கை அலுவலகத்தின் ஊடாக தணிக்கை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து அரச துறை அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதன் அவசியமும் இச்சமயம் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் வேளையில், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் (Cyber Resilience) என்பது நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலின் அடிப்படை அங்கமாக கருதப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய பொறிமுறையானது அரச இணையதளங்கள் சிதைக்கப்படுதல், ரான்சம்வேர் தாக்குதல்கள் மற்றும் தரவு கசிவுகள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாக்கவும், இடையூறுகளை முகாமைத்துவம் செய்யவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் ஊடாக, அரச நிறுவனங்கள் நிகழ்நேர அச்சுறுத்தல் கண்காணிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த சம்பவ எதிர்வினை திறன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இந்த முயற்சி வெறும் இணக்கப்பாட்டு நடவடிக்கை மட்டுமல்லாது, நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் மீளெழுச்சித் திறனுக்கான ஒரு முதலீடு என்றும் விவரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் இன்ஜினியர் எரங்க வீரரத்ன, அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், Sri Lanka CERT நிறுவனத்தின் தலைவர் திலக் பத்திரகே, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கனிஷ்க கருணாசேகர மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், முக்கியமான தகவல் உட்கட்டமைப்புகளைக் கொண்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.





