இந்தியாவின் பரோடா அருங்காட்சியகத்தில் அதிஉயர்ந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்ததும், இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான வரலாற்றுச் சிறப்புமிக்க 'தேவனி மௌரி' சர்வக்ஞ புத்தர் புனித தாதுக்கள் (Sarvagna Dhathu), முதன்முறையாக இலங்கைப் பொதுமக்களின் வழிபாட்டிற்காக கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராமய விகாரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விசேட நிகழ்வை முன்னிட்டு, நேற்று (07) கங்காராமய விகாரைக்கு விஜயம் செய்து புனித தாதுக்களை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன பின்வருமாறு குறிப்பிட்டார்: பெப்ரவரி 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு, 24 மணிநேரமும் தொடர்ச்சியாக இந்தப் புனித தாதுக்கள் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். இது இலங்கை பௌத்த சமூகத்திற்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய மிகவும் அரிய சந்தர்ப்பம் எனவும், இதன் வெற்றியை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெருந்தொகையான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வழிபாட்டிற்கு வருவோருக்கு வசதியாக விகாரை வளாகத்தை மையமாகக் கொண்டு அதிகபட்ச வசதிகளும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இப்புனித தாதுக்களை நேரில் தரிசித்து வழிபடுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதி அமைச்சர் மரியாதையுடன் அழைப்பு விடுத்தார். அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் விகாரையின் கியகரணக் குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த அரிய மற்றும் விலைமதிப்பற்ற வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.





