Skip to main content

இலங்கையின் ஃபின்டெக் (FinTech) பயணம், ‘ஃபின்டெக் ஃபெஸ்டிவல் 2026’ உடன் புதிய அத்தியாயத்தில் நுழைகிறது

MoT Editor

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினுடன் இணைந்து இலங்கை ஃபின்டெக் சங்கம் (FinTech Forum Sri Lanka) ஏற்பாடு செய்யும் "இலங்கை ஃபின்டெக் ஃபெஸ்டிவல் 2026" (Sri Lanka FinTech Festival 2026) உடன், பிராந்திய டிஜிட்டல் நிதித்துறையில் இலங்கை வலுவான அடியெடுத்து வைக்கிறது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்களின் தலைமையில் இன்று (25) அமாரி (Amari Colombo) ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நிகழ்வின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.fintechfestival.lk என்பதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2026 நவம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த இரு நாள் மாநாடு, இலங்கையின் வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதித் திறன்களைக் காட்சிப்படுத்துவதற்கும், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை பிராந்திய மற்றும் உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைப்பதற்கும் அரசாங்கம், வங்கி, நிதிச் சேவைகள், ஃபின்டெக் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் தலைவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும்.

நிதியியல் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI in finance), டிஜிட்டல் சொத்துக்கள், எல்லை தாண்டிய செலுத்துதல்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் (cross-border payments and remittances), டோக்கனாக்கம் (tokenisation), டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் அடையாளம், நிதியியல் உள்ளடக்கம் (financial inclusion), சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் நிதி வசதிகள், சுற்றுலா செலுத்துதல் முறைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடி தடுப்பு உள்ளிட்ட நிதியியலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய போக்குகள் குறித்து இந்த விழாவில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நவம்பர் 02 ஆம் திகதி "CEOs Night" நடைபெறவுள்ளதுடன், இது வங்கி, ஃபின்டெக், அரசாங்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் சிரேஷ்ட தலைவர்கள் உயர் மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை உருவாக்கும். நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள "Sri Lanka FinTech Expo" முக்கிய உரைகள் மற்றும் நிதித் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களைக் கொண்டிருக்கும், இதில் தொழில்துறை தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்பர். இந்த விழா நவம்பர் 03 ஆம் திகதி இரவோடு முடிவடையும் "FinTech Night" மூலம் நிறைவடையும், இது இலங்கையின் வளர்ந்து வரும் ஃபின்டெக் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் உறவுகளை வலுப்படுத்தவும், யோசனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், புதிய பங்காண்மைகளை உருவாக்கவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கும்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான கௌரவ ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஃபின்டெக் சங்கத்தின் தலைவர் சன்ன டி சில்வா மற்றும் ஃபின்டெக் சங்கத்தின் உப தலைவர் கொன்ராட் டயஸ் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். மேலும் அரசாங்கம், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறை, ஃபின்டெக் மற்றும் தொழில்நுட்பத் தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற விருந்தினர்கள், இலங்கை ஃபின்டெக் விழாவின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கூடுதல் தகவல்களுக்கு www.fintechfestival.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

image 01image 02image 03